Header Ads



முஸ்லிம் பிரதிநிதித்துவத்திற்கு பாரதூரமான ஆபத்து - முஸ்லிம் அமைப்புக்கள் கவலை

அமைச்சரவையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தால், நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பாதியாக குறையும் என நான்கு முஸ்லிம் அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு தசாப்த காலத்தில் அனுபவித்த தேர்தல் மோசடிகளை நிறுத்தக் கூடிய தேர்தல் முறை சீர்த்திருத்தத்தை தாம் விரும்புவதாகவும்,

எனினும் அப்படியான சீர்த்திருத்தம் நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகத்தின் நாடாளுமன்ற அங்கத்துவத்தில் பாரதூரமான பலவீனத்தை ஏற்படுத்தும் எனவும் இந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் முன்னணி, தேசிய சூரா பேரவை, இலங்கை முஸ்லிம் கவுன்சில் மற்றும் கண்டி ஒன்றியம் ஆகிய முஸ்லிம் அமைப்புகள் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.

புதிய தேர்தல் முறையின் கீழ் சிங்கள இனத்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும். அதேபோல், தமிழ், முஸ்லிம், மலே மற்றும் பறங்கியருக்கும் அப்படியான நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் எனவும் மேற்படி அமைப்புகள் தெரிவித்துள்ளன.

20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திலும் முஸ்லிம் சமூகம் தற்போது கொண்டிருக்கும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை அப்படியே பேண வேண்டும் என கோரி பல யோசனைகளையும் இந்த அமைப்புகள் முன்வைத்துள்ளன.

9பல்தேசிய தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற யோசனையும் அதில் அடங்கும். மேலும் தொகுதிகளை வரையறுக்க நியமிக்கப்படும் குழுவில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் கட்டாயம் இருக்க வேண்டும் எனவும் முஸ்லிம் அமைப்புகள் கோரியுள்ளன.

No comments

Powered by Blogger.