Header Ads



பாவமன்னிப்பு பெற, அரிய ஒரு சந்தர்ப்பம்

அன்று மகிந்த ஆட்சியிலே 18ம் திருத்தம் என்ற அரசியலமைப்பு சட்ட திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக கையை தூக்கிய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், இன்று 18ம் திருத்தத்தை இல்லாது ஒழிக்கும் 19ம் திருத்தத்துக்கு ஆதரவாக கையை உயர்த்தி ஆதரவளித்து பாவமன்னிப்பு பெற வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பு விவேகானந்தா மண்டபத்தில் நடைபெற்ற தந்தை செல்வா நற்பணி மன்ற நிகழ்வில் தலைமையுரை ஆற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

நல்லாட்சி, நீதிமன்ற சுதந்திரம், ஊடக சுதந்திரம், போலிஸ் காவல்துறை சுதந்திரம் ஆகிய பல விடயங்கள் நமது ஆட்சியின் மூலம் மீண்டும் இந்த நாட்டில் இப்போது கொண்டு வரப்பட்டுள்ளன.

இது போதாது. இந்த நல்ல விடயங்கள் நிரந்தரமாக வேண்டும் என்றால், அவை சட்டமாக்கப்பட வேண்டும்.

கடந்த ஆட்சியிலே நீதிமன்ற மற்றும் காவல்துறைகளில் தலையீடு, ஊடக அடக்குமுறை ஆகிய சர்வாதிகார அடிப்படைகள் 18ம் திருத்தத்தின் மூலம் சட்டமாக்கப்பட்டன.

ஆகவேதான் அவை சட்ட புத்தகத்தில் இருந்து அகற்றப்படும் முகமாக இப்போது 19ம் திருத்தம் வருகிறது. இதனால்தான் 19ம் திருத்தம் கொண்டு வரப்படுகிறது என்பதை நாம் உணரவேண்டும்.

18ம் திருத்தம் ஒரு பாவ காரியம். ஆகவே அன்று 18ம் திருத்தம் என்ற அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக கையை தூக்கிய அனைத்து எம்பிகளுக்கும் இன்று பாவமன்னிப்பு பெற அரிய ஒரு சந்தர்ப்பம் கிடைகின்றது.

அன்று 18க்கு ஆதரவாக கையை உயர்த்தியவர்கள், இன்று 18ம் திருத்தத்தை இல்லாது ஒழிக்கும் 19ம் திருத்தத்துக்கு ஆதரவாக ஒரு கையை மட்டுமல்ல, முடியுமானால், இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரவளித்து பாவமன்னிப்பு பெற வேண்டும்.

இதன்மூலம் மகிந்தவின் காட்டாட்சி அதிகாரப்பூர்வமாக அரசியலமைப்புரீதியாக முடிவுக்கு வரும் என்றார்.

1 comment:

Powered by Blogger.