Header Ads



19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், சிங்களவர்களுடைய மரணத்திற்கான பிடியாணை

சத்தியாகிரகம் செய்து 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக்கொண்டால், அது சிங்களவர்கள் மரணத்திற்கான பிடியாணையை நிறைவேற்றிக்கொண்டது போலாகும் என ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

பெப்பிலியான சுனேத்ராதேவி பிரிவேனாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

எவருடைய தேவைக்காக மாதுளுவாவே சோபித தேரர் உள்ளிட்டவர்கள் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தி இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கின்றனர் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன துரோக, தேசத்துரோகமான இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இந்த திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எவரும் கை உயர்த்தக் கூடாது.

அவர்கள் இதற்கு ஆதரவாக கை உயர்த்தினால் மக்கள் அவர்களை பார்த்து கொள்வார்கள் எனவும் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், பேராசிரியர் இந்துராகாரே தம்மரத்ன தேரர், கோம்பத்தல தமித்த தேரர், மெரகல்லாகம உபரத்ன தேரர் , தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர, சட்டத்தரணி மனோஹர டி சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இவர்கள் அனைவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழப்பார்.
இதனால், இந்த திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதை தடுக்க அவர் தனது ஆதரவாளர்கள் ஊடாக கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறார்.

No comments

Powered by Blogger.