ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், என்ன செய்யும் என்பதைக் கற்பனை செய்து கொள்ளலாம் - நெதன்யாஹு
உலகில் பயங்கரவாதத்துக்கு ஊக்கமளிக்கும் நாடுகளில் முதன்மையானது ஈரான் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு குற்றம்சாட்டினார்.
வாஷிங்டனில் திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பல்வேறு நாடுகளில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னால், ஆள்கள், பயிற்சி, ஆயுதம் ஆகியவற்றை வழங்கும் ஈரானின் தொடர்பைச் சித்திரிக்கும் உலக வரைபடத்தைக் காட்டி நெதன்யாஹு விளக்கிக் கூறியதாவது:
ஐந்து கண்டங்களுக்கு பயங்கரவாதிகளை ஈரான் அனுப்பியுள்ளது. உலகில் பயங்கரவாதத்துக்கு ஊக்கமளிக்கும் நாடுகளில் முதன்மையான இடத்தை வகிக்கிறது அந்நாடு. அணு ஆயுதம் இல்லாத ஈரான், உலகை பயங்கரவாதத்தின் பிடியில் உலகை சிக்க வைத்துள்ளது. அணு ஆயுதம் இருந்தால் இனி என்ன செய்யும் என்பதைக் கற்பனை செய்து கொள்ளலாம் என்றார் அவர்.
அணு ஆராய்ச்சி தொடர்பாக ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் நெதன்யாஹு உரையாற்றவுள்ளார்.
இந்நிலையில், பயங்கரவாதத்துக்குத் துணைபோகும் ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பது இஸ்ரேலுக்கு மட்டும் அச்சுறுத்தல் அல்ல; அதன் மூலம், ஏற்க முடியாத அச்சுறுத்தலுக்கு அமெரிக்காவும் ஆளாகும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூஸன் ரைஸ் கூறினார்.
அதிபர் ஒபாமாவின் முக்கிய வெளியுறவுக் கொள்கைகளில், இஸ்ரேலின் பாதுகாப்பு பிரதான இடம் வகிக்கிறது என்றும் அவர் கூறினார்.
ஈரானுக்கு அணு ஆயுதத் திறன் கிடைக்காமல் இருக்க, அமெரிக்கா செய்ய வேண்டியதைச் செய்யும் என ஒபாமா ஏற்கெனவே கூறியிருப்பதை சூஸன் ரைஸ் நினைவுபடுத்தினார்.
Post a Comment