Header Ads



கிழக்கு மாகாண சபையில் அமளிதுமளி, வரவுசெலவுத் திட்டம் நிறைவேறியது

இரண்டு மாதங்களாக இழுபறியில் இருந்த கிழக்கு மாகாண சபையின் வரவு-செலவுத்திட்டம் சகல கட்சிகளின் ஆதரவுடன் சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்டது. இந்த  வரவு-செலவுத்திட்டத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட் சமர்ப்பித்தார். வரவு-செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 34 வாக்குகள் அளிக்கப்பட்டன. இரண்டு உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளிக்கவில்லை. கிழக்கு மாகாண சபையில் 37 உறுப்பினர்கள் இருக்கின்றனர். 

கிழக்கு மாகாண சபை அமர்வு சபையின் தவிசாளர் ஆரியபதி கலபதி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமர்வின்போது புதிய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டினால் மாகாண சபையின் நான்கு அமைச்சுக்களினதும் அத்துடன் முதலமைச்சின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனையடுத்து, அனைத்து கட்சிகளின் குழுத் தலைவர்களுக்கு சபையில் உரையாற்ற சுமார் 5 நிமிடங்கள் சந்தர்ப்பம் வழங்கப்பட்டன.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபாணி தனது உரையில்,

உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் 3 மில்லியனை 4 மில்லியனாக வழங்கி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை புதிய முதலமைச்சரிடம் முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து உரை நிகழ்த்திய ஐக்கிய தேசியக் கட்சியின் குழுத் தலைவர் தயா கமகே,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமையும், கட்சியையும் பற்றி பேசும்போது, முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், தவம், லாஹீர், மன்சூர், அன்வர் ஆகியோர்களுடன் முதலமைச்சரும் இணைந்து அவரின் உரைக்கு கண்டனம் வெளியிட்டனர்.

இதன்போது சபையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. இதனையடுத்து சபையின் நடவடிக்கைகள் யாவும் தவிசாளரினால் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன.

No comments

Powered by Blogger.