Header Ads



இறத்தோட்டை - அல்வத்தையில் துப்பாக்கிகளுடன் நடமாடும் பௌத்த பிக்குகள்

அல்வத்தையில் துப்பாக்கிகளுடன் பௌத்த பிக்குகளின் நடமாட்டம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அல்வத்தைப் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற 50 ஏக்கர் காணிப் பகுதியில் ஆயுதம் தாங்கிய பிக்குகளின் நடமாட்டம் இருப்பதாக இறத்தோட்டை பிரதேச சபை உறுப்பினர் திலக்குமார சிறி தெரிவித்தார்.

இறத்தோட்டை பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் 29 ஆம் திகதி காலை அதன் தலைவர் ஜயந்த புஸ்பகுமார தலைமையில் நடைபெற்ற போதே சபை உறுப்பினர் குமாரசிறி இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் தான் முறைப்பாடு செய்த போது நெற்றியில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.

இதனையடுத்து, பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை வாபஸ் பெறும் நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறேன் என்று திலக்குமார சிறி தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

அல்வத்தைப் பகுதியில் கடந்த சில சீருடை தரித்த பிக்குமார் சிலர் துப்பாக்கிகளை ஏந்திய வண்ணம் நடமாடித் திரிகின்றனர்.

இதனால் அங்குள்ள மக்கள் பெரும் பீதிக் குள்ளாகியுள்ளனர். உயர் ரக வாகனங்களில் வந்திறங்கும் இவர்கள் இங்கு கைவிடப்பட்ட நிலையிலுள்ள சுமார் 50 ஏக்கர் காணிப் பகுதியிலேயே இவர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது.

இது பற்றி பொலிஸாரிடம் நான் முறைப்பாடு செய்திருந்தேன். இதனால் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து கொலை பயமுறுத்தல் செய்யப்பட்டு எனது பொலிஸ் முறைப்பாட்டை வாபஸ் பெற வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டேன்.

குறிப்பிட்ட காணிப் பகுதியின் உரிமையாளர் வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இக்காணிப் பகுதியில் விஜயபால மன்னர் காலத்தில் அமைக்கப்பட்ட குகையுடன் கூடிய சுரங்கப்பாதையொன்று இருப்பதாக கர்ண பரம்பரைக் கதை ஒன்றும் உண்டு.

இங்கு ஏதேனும் புதையல் இருக்கலாம் என்றும் அதை தோண்டி எடுப்பதற்கே இந்த ஆயுததாரிகள் முயன்று வருவதாக மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். எது எப்படியாயினும் சீவர உடை தரித்துக்கொண்டு பயங்கர துப்பாக்கிகளை பகிரங்கமாகவே ஏந்தித் திரிவதும் அதன் காரணமாக மக்கள் மத்தியில் திகிலை உருவாக்குவதையும் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே, பிரதேச சபை இவ்விடயத்தில் தலையிட்டு மக்கள் மத்தியில் அமைதிச் சூழலை ஏற்படுத்த முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் என குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இரத்தோட்டை அல்வத்த பகுதி மாத்தளையய்ச்சார்ந்த பிரதேசசமாகும். தலைப்பில் பண்டாரவளை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. திருத்திக்கொள்ளவும். நன்றி.

    ReplyDelete

Powered by Blogger.