அரசின் மீது முஸ்லிம் மக்கள் சந்தேகமோ, அச்சமோ கொள்ளத் தேவையில்லை - கிழக்கு இராணுவ தளபதி
அரசாங்கத்துக்கும் பொதுபலசேனாவுக்கும் இடையில் எவ்விதமான தொடர்பும் இல்லை. அரசின் மீது முஸ்லிம் மக்கள் எந்தவிதமான சந்தேகமோ, அச்சமோ கொள்ளத் தேவையில்லை என கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா தெரிவித்துள்ளார்.
திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள வறிய குடும்பத்துக்கு, இராணுவத்தினரின் உதவியுடன் நிரந்தர வீடொன்றை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பொதுபல சேனாவுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக முஸ்லிம் மக்களிடம் ஒரு சந்தேகம் இருக்கின்றது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தொடர்பில் உங்கள் கருத்து என்ன? என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா, இது தொடர்பிலான பல சந்தேகங்களுக்கு முஸ்லிம் மக்கள் தெளிவு பெறும் வகையில், அண்மையில் பாதுகாப்பு செயலாளர், ஊடகங்கள் மூலமாக, விரிவான விளக்கம் ஒன்றினை தெரியப்படுத்தி உள்ளார்.
எனவே, அரசாங்கம் மக்களின் பாதுகாப்பிலும் அபிவிருத்தி விடயங்களிலும் கரிசனையுடன் உள்ளது. பொய் பிரச்சாரங்களின் மூலம் முஸ்லிம் மக்கள் அரசாங்கம் மீது அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.
Post a Comment