Header Ads



பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 142 எம்.பி.க்கள் A/L பரீட்சையில் சித்தியடையாதவர்கள்..!


பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகைமைகள் கூட கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார்.

தற்போதைய பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களில் 142 பேருக்கு கல்விப் பொதுத் தராதர உயர்தர கல்வித் தகமை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது மொத்தமாக 142 பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 94 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சாதாரண தரக் கல்வித் தகமை கூட கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளின் அறிவாற்றலை உயர்தர, சாதாரண தரத் தகமைகளைக் கொண்டு அளவீடு செய்ய முடியாது என்ற வாதம் ஒரு புறமிருக்க, அடிப்படை கல்வித் தகைமைகளாக கருதப்படும் பிரதான பரீட்சைகளில் சித்தியடையாத பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பாராளுமன்றில் உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும், பிரதி அமைச்சர்களாகவும் பதவி வகிக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசியல்வாதிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல் அபிப்பிராயம் கிடையாது என அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

சமூக வலையத்தளங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் மக்களின் கருத்துக்கள் மூலம் இதனை புரிந்துகொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் கொலைகாரர்கள், கொள்கைக்காரர்கள், பாலியல் வல்லுறவுகளில் ஈடுபடுவோர், குண்டர்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களாகவே கருதப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையில் மாற்றத்தை கொண்டு வர அரசியலில் அடிப்படை ரீதியான சில திருத்தங்களை செய்ய வேண்டியிருப்பதாக புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.