Header Ads



மகிந்தவுக்கு எதிரான பொதுவேட்பாளர் – முக்கிய நகர்வாக இருக்கும்


சிறிலங்காவில் நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு, எதிர்க்கட்சிகள் பொது நிலைப்பாடு ஒன்றுக்கு வந்துள்ளன. 

கொழும்பு நகர மண்டபத்தில் நேற்று மாலை நடந்த கூட்டம் ஒன்றில், பிரதான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அனைவரும், நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு பொது இணக்கப்பாடு ஒன்றுக்கு வந்துள்ளனர். 

சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் மாதுளுவாவே சோபித தேரரின் ஏற்பாட்டில் நேற்று நடத்தப்பட்ட கூட்டத்தில், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜேவிபி தலைவர் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி, ஜனநாயக கட்சித் தலைவர் சரத் பொன்சேகா, முன்னாள் தலைமை நிதியரசர் சிராணி பண்டாரநாயக்க, ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் மேல்மாகாண அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

அத்துடன் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். 

இந்தக் கூட்டத்தில், அடுத்த அதிபர் தேர்தலில், நிறைவேற்று அதிகார ஆட்சிமுறையை முன்வைத்து பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்த ஒரு வரைவு முன்வைக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, தேர்தல் அறிக்கையில், நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சியை ஒழிக்கும் அரசியலமைப்புத் திருத்த வரைவை வெளியிடுதல், அதிபர் தேர்தல் முடிந்து ஒரு மாதத்துக்குள், அதிபர் ஆட்சிமுறையை ஒழிக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வருதல், தேர்தலுக்குப் பின்னர் ஆறு மாதங்களில் அதிபர் ஆட்சிமுறை முற்றாகவே செயலிழக்கச் செய்தல், உள்ளிட்ட யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இந்தக் கூட்டத்தில் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடு, அடுத்த ஆண்டு நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் சிறிலங்கா அதிபர் தேர்தலில், நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறை ஒழிப்பை இலக்கு வைத்து, பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சியில் ஒரு முக்கிய நகர்வாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

No comments

Powered by Blogger.