'சிங்களவர்களுக்கு முஸ்லிம்களை எதிரியாக காண்பித்து மோதலை உண்டுப்பண்ண முயற்சி'
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் அரசாங்கம் செயற்பட்டதை போன்று தனது இயலாமையை மூடி மறைப்பதற்கு ராஜபக் ஷ அரசு இனவாதத்தை தூண்டிவிடுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க குற்றம் சுமத்தினார்.
அத்தோடு தேசிய பிரச்சினைக்கு இந்தியா தீர்வு வழங்குமென தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்வதில் எவ்வித பிரயோசனமுமில்லை. அதற்கு ஒத்துழைக்கபோவதுமில்லை. மாறாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் உடைமைகளை பறித்தெடுக்கவே இந்தியா முனைவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம் என்ற தொனிப்பொருளின் கீழ் நேற்று இடம் பெற்ற பேரணி முடிவடைந்த பிற்பாடு விஹாரமாதேவி பூங்காவின் திறந்த வெளி அரங்கில் இடம் பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சோஷலிச இளைஞர் சங்கத்தின் இத்தகைய நிகழ்வு பாராட்டிற்குரியது. தற்போதைய இளைஞர்கள் இத்தகைய நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும். மாறாக இந்த அரசாங்கம் இளைஞர்களை கார்ரேஸ், ரக்பி விளையாட்டுக்களில் ஈடுப்படுத்தவே முனைகிறது. இந்நிலையில் இளைஞர்களை சரியான வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவரிற்கும் உள்ளது.
இருப்பினும் தற்போது இளைஞர்களுக்கான நாளை நாமல் ராஜபக் ஷ மயப்படுத்தப்பட்டுள்ளது. எனவே நாட்டின் தற்போதைய காலகட்டத்தில் தேசிய ஐக்கியம் கறுப்பு ஜூலை பற்றி பேசுவதற்கு இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பு ஆட்சி செய்தவர்களே மூலக்காரணம். குறிப்பாக 1950 இற்கு பிற்பாடு ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களே மூலக்காரணம்.
இந்நாட்டில் கறுப்பு ஜூலை ஏற்படுவதற்கு முன்பு ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஆட்சி காலத்தில் பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் காணப்பட்டது. ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட தொழிற் சங்கத்தினர் வீதியிலிறங்கி போராடியமைக்கு எதிராக தாக்குதல் மேற்கொண்டனர். பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் ஜே.ஆர்.ஜெயவர்தன தீண்டாடிய வேளையிலேயே சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் மோதல் நிலையை உருவாக்கி கறுப்பு ஜூலையை ஏற்படுத்தினார்.
அது போலவே 2005 ஆம் ஆண்டிற்கு பிற்பாடு மதங்களுக்கிடையே நல்லிணக்கம் காணப்பட்ட போதிலும் 2009 ஆம் ஆண்டிற்கு பின்பு நாட்டில் பொருளாதார ரீதியில் பல்வேறு பிரச்சினையை அரசாங்கம் முகங்கொடுத்து வருகிறது. நாட்டின் வைத்தியசாலைகளில் மருந்து இல்லாது நோயாளர்கள் பெரும் அவதிப்படுகின்றனர். அது போன்றே கல்வியின் நிலையும் காணப்படுகிறது. அது மாத்திரமின்றி தற்போது நாட்டில் கடனை கொண்டே அரசின் செலவீனங்களை மேற்கொள்ள வேண்டி எற்பட்டுள்ளது.
எனவே இது போன்று பல்வேறு பிரச்சினைகளை மூடிமறைக்க ஜே.ஆர்.ஜெயவர்தன கறுப்பு ஜூலையை ஏற்படுத்தியதை போன்று ராஜபக் ஷவின் அரசாங்கமும் தனது இயலாமையை மூடிமறைக்க சிங்களவர்களுக்கு முஸ்லிம்களை எதிரியாகவும் தமிழர்களுக்கு சிங்களவர்களை எதிரியாகவும் காண்பித்து மோதலை உண்டுப்பண்ண அரசு முயற்சிகிறது. இதனடிப்படையிலேயே அளுத்கம வன்முறை ஏற்பட்டது. இந்த இனவாத அரசியலை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
30 வருட யுத்தம் நிறைவடைந்த போதும் அதனால் தமிழர்களுக்கு ஏற்பட்ட வடுக்கள் இதுவரை ஆரயவில்லை. இந்நிலையில் தமிழர்கள் இந்தியா தமக்கு தீர்வும் வழங்கும் என எதிர் பார்க்கின்றனர். அவ்வாறாயினும் வடக்கு கிழக்கில் அனைத்து தமிழர்களின் உடைமைகளும் இந்தியா வசப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழர்கள் இந்தியாவை நம்பிக்கை கொள்வதில் எவ்வித பிரயோசனமும் இல்லை. அது போன்று இந்தியா தீர்வு வழங்க போவதுமில்லை என்றார்.
Post a Comment