பொது இடங்களில்பெண்கள் சத்தம் போட்டு சிரிக்க கூடாது - துருக்கி துணை பிரதமர்
பொது இடங்களில் பெண்கள் சத்தம் போட்டு சிரிக்கக் கூடாது என துருக்கி துணை பிரதமர் பேசியது அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியின் பிரதமராக இருப்பவர் ரீசெப் தயீப் எர்டோகான். இவரது அமைச்சரவையில் துணை பிரதமராக பொறுப்பு வகிப்பவர் மூத்த அரசியல்வாதியான புலென்ட் அரினிக். தற்போது துருக்கியில் ஆளுங்கட்சியாக இருக்கும் இஸ்லாமிய அடிப்படையிலான நீதி மற்றும் மேம்பாட்டு கட்சியை நிறுவியவர்களில் இவரும் ஒருவர். ரம்ஜான் மாத நிறைவையொட்டி மேற்கு புர்சான் மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புலென்ட் அரினிக் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், ‘ஆண்கள் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அதை போலவே பெண்களும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். பெண்கள் நாகரிகத்துடன் நடக்க வேண்டும். குறிப்பாக, பொது இடங்களில் பெண்கள் சத்தம் போட்டு சிரிக்கக் கூடாது. எப்போதும் அவர்கள் கண்ணியம் தவறக் கூடாது’ என்றார்.
மேலும், ‘தற்போது நவீன சமூக வாழ்க்கை முறையில் போதை பழக்கங்கள் உள்ளிட்டவை மிகப் பெரிய சமூக பிரச்னைகளாக உள்ளன. பெண்கள் தங்களது கணவர்மார்களின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும். அதே போல் ஆணும் மனைவி, குழந்தைகள மீது அன்பு செலுத்தி குடும்பத்துடன் வலுவான பிணைப்பை வைத்திருக்க வேண்டும்’ என்று அடுக்கடுக்காக அறிவுரை கூறினார். பெண்கள் சிரிக்கக் கூடாது என்று அவர் பேசியதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment