மாட்டிறைச்சியுடன் பஸ்ஸில் சென்றவர் இறக்கிவிடப்பட்டார் - மடவளையில் சம்பவம்
(JM.HAFEEZ)
ஒரு கிலோ இறைச்சிப் பார்சலுடன் பஸ் வண்டியில் ஏறிய ஒருகனவான் பஸ்ஸை விட்டும் கிழே இறக்கிவிடப்பட்ட சம்பவம் ஒன்று (30.7.2014 மாலை) மடவளை நகரில் இடம் பெற்றது.
கண்டி – வத்துகாமம் பிரதான வீதியில் மடவளை வங்குவக்கடை என்ற இடத்திலுள்ள இறைச்சிக்கடையில் ஒரு கிலோ இறைச்சிப் பார்சலுடன் 9 ருபா டிக்கட் தூரத்திற்கு ஒருவர் கண்டியில் இருந்து திகனை நோக்கி வரும் தனியார் பஸ் வண்டியில் ஏறியுள்ளார். அதாவது சுமார் 500 மீட்டர் தூரம் அவர் பயணம் செய்யும் நோக்கில் ஏறியுள்ளார்.
அவரை அணுகிய பஸ் நடாத்துனர் பார்சலில் என்ன இருக்கிறது எனக் கேட்டுள்ளார். அவர் ஒரு கௌரவமான அரச ஊழியம் செய்யும் கனவான் என்பதால் பொய்சொல்ல விரும்பவும் இல்லை. பொய்யை மறைக்க இன்னும் பல பொய்கள் கூறவேண்டுமா என்ற நிலையிலும் தன்னிடம் இருப்பது 5 கிலோவிலும் குறைவானது என்ற படியால் தைரியமாக உண்மையைக் கூறியுள்ளார்.
ஆனால் இறைச்சியுடன் பயணிக்க முடியாது என்று கூறி நடாத்துனர் மேற்படி அரச ஊழியரை கிழே பலவந்தமாக இறக்கிவிட்டார். அவனுடன் சட்டம் பேசப் போனால் அது பிரிதொரு இனக் கலவரத்திற்கு தூபமிடும் என்பதால் அவர் பொறுமை காத்து மற்றொரு பஸ்வண்டியில் ஏறிவந்துள்ளார்.
இதனை நேரில் கண்ட சிலர் இது தொடர்பாக ஒரு பொலீஸ் உத்தியோகத்தரிடம் சட்டம் என்ன என்று கேட்டுள்ளனர். பஸ்வண்டியில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் சில பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. சில பொருட்களுக்கு அளவு வரையுண்டு. மதுபான போத்தல் கூட ஒன்றை ஒருவர் அனுமதி இன்றி எடுத்துச் செல்லாம். உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்வதில் தடை இல்லை. இறைச்சி போன்றவை ஐந்து கிலோவிற்கு உற்பட்டதாக ஒருவர் தனது உணவிற்காக எடுத்துச் செல்லாம் என்றார்.
நாட்டில் சட்ட விரோத நடவடிக்கைகள் எத்தனையோ நடக்கிறது. மாற்றான் மனைவியுடன் சட்டவிரோதமாக சல்லாபிக்க பஸ்வண்டிகளில் பஸ் நடாத்துனர்கள் அனுமதி அளிக்கின்றனர். மது போதையில் பஸ் ஏறுபவர்களையும் ஏற்றிக் கொள்கின்றனர். காச நோய் போன்ற நோய்கிருமிகளைப் பரப்பும் சிலர் கூட 'மாஸ்' அணிந்து கொண்டு பஸ்வண்டிகளில் ஏறுகின்றனர். இன்னும் சட்ட விரோதமான எத்தனையோ விடயங்கள் இடம் பெறும் போது ஒரு குடும்பஸ்தர் தனது உணவிற்காக ஒரு கிலோ மாட்டிறைச்சியை எடுத்துச் செல்லக் கூடாதென்று சட்டம் எங்கிருக்கிறது எனப் பொது மக்கள் பலர் இதனைக் கேள்வியுற்று அங்கலாய்த்தனர்.
Post a Comment