''காஸா விடயத்தில் தீர்வை வழங்க தவறிய ஐ.நா. இலங்கையை 3 வருடங்களாக பின்தொடர்கின்றது''
ஐ.நா. முற்றுமுழுதாக அரசியல்மயமாகிவிட்டது. இலங்கையைப் பின்தொடர்வதில் தீவிரம் காட்டும் ஐ.நா., காஸாவில் நடைபெறும் பெரும் துன்பியலுக்கு துரித தீர்வுகாணத் தவறிவிட்டதென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்பான அரச தரப்பு எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வரின் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்குப் பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டிய அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் கூறுகையில்,
காஸாவில் இடம்பெற்றுவரும் பாரிய துன்பியல் சம்பவங்கள் தொடர்பில் ஐ.நா. வினைத்திறன்மிக்க நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லையென்பது தொடர்பில் நாம் சிந்திக்கவேண்டும்.
காஸா தொடர்பில் ஐ.நா.வால் ஏன் செயற்பட முடியாதுள்ளது? ஐ.நா. முற்றுமுழுதாக அரசியல்மயமாகிவிட்டதே இதற்குக் காரணம். காஸா விடயத்தில் துரித தீர்வை வழங்குவதில் தவறிவிட்ட ஐ.நா., இலங்கையை மட்டும் மூன்று வருடங்களாகப் பின்தொடர்கின்றது.ஐ.நா. தனது அரசியல் தேவைகளுக்காக மனித உரிமைகளை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றது. ஐ.நா. போன்ற நிறுவனங்கள் நியாயமாக செயற்படவேண்டும். சர்வதேச சமூகத்தால் இவ்வாறான நிறுவனங்கள் நியாயமானதென ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.ஐ.நா.மனித குலத்தின் மதிப்பிற்குட்பட வேண்டும்.
Post a Comment