Header Ads



சிறுநீர் கழித்ததால் 2 கோடி லிட்டர் தண்ணீர் வேஸ்ட்


அமெரிக்காவில் மிகப்பெரிய நீர்த்தேக்கத்தில் வாலிபர் ஒருவர் சிறுநீர் கழித்ததால், 2 கோடி லிட்டர் தண்ணீரை அதிகாரிகள் வெளியேற்றினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவில் ஓரிகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் என்ற இடத்தில் மிகப் பெரிய நீர்த்தேக்கம் உள்ளது. வனப்பகுதிகளில் இருந்து நீரை கொண்டு வந்து இயற்கையான சூழலுக்கு மத்தியில் தண்ணீரை சேமித்து மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்து வருகின்றனர். இந்த நீர்த்தேக்கத்தில் சுமார் 2 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் கடந்த புதன்கிழமை நீர்த்தேக்கம் அருகே விலங்கின் கழிவு கிடந்தது. ஆனால், அதை பார்த்த போது மனிதர்கள் வந்து சென்றதற்கான தடயங்கள் இருந்தன. சந்தேகப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், சுமார் 18 வயது நிரம்பிய 3 வாலிபர்கள் வேலிக்குள் அத்துமீறி நுழைந்தது தெரிந்தது. அதில் ஒருவர் குடிநீர் தேக்கத்தில் சிறுநீர் கழிப்பதும் பதிவாகி இருந்ததை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சுகாதாரமற்ற குடிநீரை மக்களுக்கு சப்ளை செய்ய கூடாது என்று அதிகாரிகள் உடனடியாக முடிவெடுத்தனர். முன்னதாக நீர்த்தேக்கத்தில் இருந்து மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை கூடத்துக்கு ஆய்வுக்கு அனுப்பினர். இதையடுத்து நீர்த் தேக்கத்தில் இருந்த சுமார் 2 கோடி லிட்டர் தண்ணீரை அதிகாரிகள் வெளியேற்றினர். பின்னர் நீர்த்தேக்கம் சுத்தம் செய்யப்பட்டு புதிதாக நீர் நிரப்பப்பட்டது  என்று நீர்த்தேக்கத்தை நிர்வகித்து வரும் அதிகாரி டேவிட் செப் கூறினார்.ஏற்கனவே கடந்த 2011ம் ஆண்டு இதேபோல் நீர்த்தேக்கத்தில் அசுத்தம் செய்தது தெரிய வந்தது. அப்போது 24 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மூன்று ஆண்டுக்குள் 2வது முறையாக 2 கோடி லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.