Header Ads



மகளின் திருமணத்துக்கு பணம் சேர்க்க பேரக் குழந்தையை விற்பனை செய்த தாத்தா


மகளின், இரண்டாவது திருமணத்துக்கு பணம் சேர்ப்பதற்காக, தன் பேரக் குழந்தையை, "பேஸ்புக்' மூலம், விற்பனை செய்த, தாத்தாவை, போலீசார் கைது செய்தனர்.

"சமூக வலைத் தளங்கள்' என, அழைக்கப்படும், "பேஸ்புக், டுவிட்டர் 'ஆகியவை, இன்றைய இளம் தலைமுறையினரிடையே, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நட்புறவை வளர்ப்பதற்காகவும், தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்வதற்காகவும், இந்த வலைத் தளங்களை, இளம் தலைமுறையினர், பெரிதும் பயன்படுத்துகின்றனர்.சில, ஆர்வக் கோளாறு இளைஞர்கள், "பேஸ்புக்'கின், "ஸ்டேட்டஸ்'களுக்கும்,"லைக்'களுக்கும் அடிமையாகிப் போன, அவலமும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், குழந்தைகளை சட்ட விரோதமாக, கடத்தி, விற்பனை செய்யும், சந்தையாகவும், "பேஸ்புக்'கை பயன்படுத்தும், ஆபத்து விளையாட்டும், தற்போது துவங்கியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த, நூரி என்ற பெண்ணுக்கு, சமீபத்தில், மருத்துவமனையில், ஆண் குழந்தை பிறந்தது. அடுத்த மூன்று நாட்களிலேயே, அந்த குழந்தை, திடீரென காணாமல் போனது. பதறித் துடித்த, நூரி, போலீசில் புகார் அளித்தார்.இதற்கிடையே, காணாமல் போன, குழந்தையின் புகைப்படத்துடன், அந்த குழந்தையை விற்பனை செய்வது தொடர்பான தகவல்,"பேஸ்புக்'கில் வெளியாகியிருந்தது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், அந்த புகைப்படத்தில் இடம் பெற்றிருந்த குழந்தை குறித்து, விசாரித்தனர். அப்போது, மருத்துவமனையில், காணாமல் போன குழந்தை தான் அது என, தெரிய வந்தது.இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

போலீசார் கூறியதாவது:குழந்தையின் தாயாரான நூரியை, அவரது கணவர், பிரிந்து சென்று விட்டார். இதனால், நூரிக்கு இரண்டாவது திருமணம் செய்ய, அவர் தந்தை பெரோஸ் கான் முடிவு செய்தார். இதற்கு பணம் தேவைப்பட்டதுடன், புதிதாக பிறந்த குழந்தையும், தடையாக இருந்தது.இதையடுத்து, மருத்துவமனையிலிருந்த இரண்டு நர்சுகளின் உதவியுடன், பேரனை கடத்திச் சென்றார். பின், குழந்தையை விற்பனை செய்வதற்கு, சுனிதா என்பவரின் உதவியை நாடினார். இவர் தான், "பேஸ்புக்'கில், குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டவர். குழந்தையின் புகைப்படத்தை பார்த்த, டில்லியைச் சேர்ந்த, தொழில் அதிபர் அமீத் குமார், 8 லட்ச ரூபாய்க்கு, அந்த குழந்தையை வாங்கினார். இதையடுத்து, குழந்தையை விற்ற, பெரோஸ் கான், அவருக்கு உதவிய, மருத்துவமனை ஊழியர்கள், குழந்தையை வாங்கிய, அமீத் குமார் ஆகியோர், கைது செய்யப்பட்டனர். குழந்தை மீட்கப்பட்டு, அதன் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். 

No comments

Powered by Blogger.