Header Ads



தண்டனைக்கு அஞ்சாதவர்களே முஸ்லிம்கள் மீது தாக்குதல் - தேசிய கிறிஸ்தவ ஒன்றியம்

சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்து வருவது தொடர்பாக இலங்கைத் தேசிய கிறிஸ்தவ ஒன்றியம் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அண்மைய மாதங்களில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தமது வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் சம்பவங்கள் மற்றும் வன்செயல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். 

இதற்கு மேலாக முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளன. அத்துடன் முஸ்லிம் பெண்கள் தமது மதத்தினால் வரையறுக்கப்பட்ட  ஆடைகளை  அணிந்து  சென்றபோது தாக்கப்பட்டுள்ளனர். 

தண்டனைகளுக்கு அஞ்சாத குழுவினர் இந்தத் தாக்குதல் சம்பங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இவர்கள் கைது செய்யப்படவுமில்லை தண்டிக்கப்படவுமில்லை. இந்தத் தாக்குதல் சம்பவங்களைப் பலர் நேரில் பார்த்துள்ளனர். 

புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவுச் சாட்சியங்களும் உள்ளன. ஆனால் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் மந்தமாகச் செயற்படுகின்றனர். 30 வருடகாலம் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த நிலையில் இந்தச் சம்பவங்கள் இங்கு இடம்பெற்று வருகின்றமை வருத்தமளிக்கிறது. 

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசு கால அவகாசம் கேட்டுள்ளது. ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இரண்டு தீர்மானங்கள் மிகவும் காத்திரமானவை. 

இந்த நிலையில் இங்கு நடைபெறும் சம்பவங்களுக்கு இலங்கை அரசு நேர்மையான வகையில் பொறுப்புக் கூறவேண்டும். பாதுகாப்புத் தரப்பினர் இவற்றைத் தடுப்பதற்கு சட்டத்தை நிலைநிறுத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்றுள்ளது.

No comments

Powered by Blogger.