July 30, 2012

முஸ்லிம் காங்கிரஸ் இனவாத கட்சியென்று போலி பிரசாரம் - ரவூப் ஹக்கீம்


அப்துல் ரவூப்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் இனவாத கட்சியல்லவென்றும், அனைத்து இனத்தவர்களையும் அரவணைத்துச் செல்லும் அரசியல் கட்சியென்றும் அதன் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரணவீர திஸாநாயக்கவை ஆதரித்து தெஹியத்தகண்டிய மகாவலி 'சீ' வலயத்தில் உள்ள ரிதீஎல கிராமத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். மாவனாகம, தொலகந்த, ரங்ஹலகம ஆகிய ஊர்களில் நடந்த பிரசார கூட்டங்களில் அவர் உரையாற்றினார்.

அமைச்சர் ஹக்கீம் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது,

இப்பிரதேச அரசியல்வாதிகள் சிலர் முஸ்லிம் காங்கிரஸ் ஓர் இனவாதக் கட்சியென்றும் அதன் காரணமாக இக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் இங்குள்ள சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகின்றனர்.

அதைப்பற்றி நாங்கள் அலட்டிக்கொள்ளப்போவதில்லை. அத்தகையோரை நாங்கள் விமர்சிக்கப்போவதுமில்லை.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், இந்நாட்டு முஸ்லிம்களுக்கு மட்டும் உரிய கட்சியல்ல. இக்கட்சி இந்நாட்டில் வாழும் சகல இனத்தவரையும் அரவணைத்துக்கொண்டு அரசியலில் ஈடுபடுகின்றது. இங்கு சிங்கள மக்களுக்கும் எங்கள் கட்சியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியுமென்பதை கிழக்கு மாகாணத் தேர்தல் முடிவடைந்த பின்னர் நிரூபித்து காட்ட இருக்கிறோம். அந்த நோக்கத்திலேயே தெஹியத்தகண்டிய சேர்ந்த சிங்கள வேட்பாளர் ஒருவரை எமது கட்சியின் சார்பில் போட்டியிடச் செய்துள்ளோம். கிழக்கு மாகாண சபை தேர்தலில் சிங்கள வேட்பளார்களும் எமது கட்சியில் போட்டியிடுவதை எமது கட்சிக்கு அளிக்கப்பட்ட கௌரவமாக கருதுகிறேன்.

ஏற்கனவே யட்டிநுவர பிரதேச சபையில் சிங்கள பெண்மணியொருவர் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு உறுப்பினராக இருக்கிறார்.

இந்தத் தேர்தலில் நாங்கள் மட்டும் தனித்துப் போட்டியிடவில்லை. அரசாங்கத்தில் இணைந்துள்ள சில இடதுசாரி கட்சிகளும் தனித்துப் போட்டியிடுகின்றன.  

கடந்த காலங்களில் நாடு இரண்டாக பிளவுபடும் அபாயம் நிலவியது. இப்பொழுது அந்த நிலை இல்லை. 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு 17 ஆசனங்களை வென்றெடுத்தது. தீவிரவாதம் தலைதூக்கியிருந்த காலகட்டத்தில் பலத்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் எமது கட்சி வேட்பாளர்கள் உயிரைக் கூட துச்சமாக மதித்து மிகுந்த அர்ப்பணிப்புடன் அத் தேர்தலில் களமிறங்கினார்கள். அவர்கள் செய்த தியாகம் அளப்பரியது.

ஜனாதிபதியுடனும், முக்கிய அமைச்சர்களுடனும் கலந்தாலோசித்த பின்னரே இத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்ற முடிவுக்கு வந்தோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 2005 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்களில் நாம் எதிராகவே போட்டியிட்டு வந்தோம். 2010 ஆம் ஆண்டுத் தேர்தலில் நாம் அவரை எதிர்த்து போட்டியிட்ட காரணத்தினாலேயே அப்பொழுது அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பலம் கிடைக்காமல் போனது என்றார்.

தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்திகள் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

இக் கூட்டத்தில் அமைச்சரின் ஆலோசகரான அமரபுர மகா நிக்காய சங்கசபாவின் அணுநாயக்கர் தொடங்வல தம்மரத்ன தேரர், அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி மஹிலால் டி சில்வா ஆகியோரும் உரையாற்றினர். அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர் சிலரும் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.
 


 

1 கருத்துரைகள்:

ஆமா ஏனைய இன மக்கள் உங்க ஆதரவுகுரலுக்காக தவம் இருக்காங்க பாருங்க??? ஒழுங்கா முஸ்லிம்களுக்கே குரல் கொடுக்க துப்பில்ல மன்னார் முஸ்லிம்கள் துன்பபட்டுகொண்டிருக்கையில் நீங்கள் அமரர் சிவாவுக்கு காவெடி எடுக்கிறீர்கள்??? உங்க போக்கினால் உங்க கட்சி பிறந்த இடத்தில் கட்சி சாக கிடக்கிறது இந்த முறை மட்டகளப்பு முஸ்லிம்கள் உங்கள் கட்சிக்கி ஒரு ஆசனமும் பெற வழி செய்யாமல் ஆப்பு வைக்கிறார்களோ தெறியாயது முதலில் முஸ்லிம் சகோதரகளுடனான வேறுபாட்டை கழையுங்கள் உங்கள் போக்கினால்தானே உங்கள் கட்சிக்கி சவால் விடும் வகையில் ஏனைய முஸ்லிம் கட்சிகள் உறுவாகி இருக்கின்றன நீங்கள் மட்டும் தலைகனம் எனும் தனி மனித வாத்தை விடுத்து பொதுமைக்கும் விட்டு கொடுப்பு கழந்துறவாடி முடிவெடுப்பு என்பவற்றிட்கு உள பூர்வமாக இனங்கி வந்தால் முஸ்லிம் சமூகதிட்கு இவ்வளவு சீரழிவு வராது

Post a Comment