July 21, 2012

கொழும்பு மேயர் முஸம்மில் ரவூப் ஹக்கீமுக்கு பகிரங்க சவால்..!

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், மீண்டும், முஸ்லிம் மக்களை ஏமாற்றாது, அரசாங்கத்தின் அமைச்சு பதவிகளில் இருந்து விலகி, அனைத்து சிறப்புரிமைகளையும் கைவிட்டு, தேர்தலில் களம் இறங்குமாறு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு சவால் விடுப்பதாக , கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம்.முஸ்ஸாமில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கில் தனித்து போட்டியிடுவது என எடுத்த தீர்மானம் காரணமாக, அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானத்திருந்த மக்களை ஏமாற்றி, அவர்களின் வாக்குகளை பெற்று, மீண்டும் அரசாங்கத்துடன் இணையும் திட்டமிட்ட சூழ்ச்சியில் முஸ்லிம் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தலை வலுவான முறையில் எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. பகுதி, பகுதியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து, ஐக்கிய தேசியக் கட்சி தனது கடும் எதிர்ப்பை அரசாங்கத்திற்கு தெரிவித்து கொள்கிறது. அரச அதிகாரம், அரச சண்டித்தனம் உள்ளிட்ட அனைத்து அரச வளங்களையும் பயன்படுத்தி, கடும் அடக்குமுறையின் கீழ், வாக்குகளை கொள்ளையடிப்பதற்காகவே, அரசாங்கம்,  பகுதி, பகுதியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துகிறது.

இதனால் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை முடிந்தளவில், நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த கூடிய உச்சளவிலான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலை ஆணையாளரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் முஸ்ஸாமில் மேலும் தெரிவித்துள்ளார். gtn

0 கருத்துரைகள்:

Post a Comment