Header Ads



ஆபியா ஸித்திகை விடுதலைசெய் - ஜமாஅத்தே இஸ்லாமி பாரிய ஆர்ப்பாட்டம்


குற்றச்செயலில் ஈடுபட்டார் என்ற போலிக் குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்கப் படையினரால் கைதுசெய்யப்பட்டு, தற்போது அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தானிய நரம்பியல் நிபுணரான டாக்டர் ஆபியா ஸித்திக்கியை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, பாகிஸ்தான் தலைநகரில் மாபெரும் பேரணியொன்று இடம்பெற்றது.

இப்பேரணியில் கலந்துகொண்டு கருத்துரைத்த பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் கராச்சி பிராந்தியத் தலைவர் முஹம்மத் ஹுஸைன் மெஹந்தி, "ஆஃபியா ஸித்தீக்கியின் வழக்கில் அவருக்கு 86 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வழங்கியுள்ள தீர்ப்பின் மூலம் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரானதும் முற்றிலும் பாரபட்சமானதுமான தன்னுடைய போக்கை அமெரிக்க நீதிமன்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது " எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த சுலோகங்களைத் தாங்கிய ஆயிரக்கணக்கான பேரணியாளர்கள், ஆஃபியா ஸித்தீக்கியின் விடயத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வராமல் மௌனம் சாதிக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் கோழைத்தனத்தையிட்டுத் தமது அதிருப்தியை வெளிக்காட்டவும் தவறவில்லை.

2008 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் கஸ்னி காவல் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது அமெரிக்க எஃப்.பி.ஐ. அதிகாரிகள் மீதும் அமெரிக்கப் படைவீரர் ஒருவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 2010 செப்டெம்பர் மாதம் ஆஃபியா ஸித்திக்கிக்கு நிவ் யோர்க் நீதிமன்றம் 86 வருடச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்புக் குறித்து மேன்முறையீடு செய்யும் உரிமை மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

No comments

Powered by Blogger.