Header Ads



ஆயுதப்பயிற்சி பெற்ற 150 புலிகள் ஊடுருவினார்களா..? முரண்பட்ட கருத்துக்கள்

தமிழ்நாட்டில் மூன்று முகாம்களில் சிறப்பு ஆயுதப்பயிற்சி பெற்ற சுமார் 150 விடுதலைப் புலிகள் இலங்கைக்கு திரும்பியுள்ளதாகவும் அவர்கள் வடக்கு,கிழக்கில் மறைந்திருந்து சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அரச புலனாய்வுச் சேவைகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஐலன்ட் நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

“வடக்கு,கிழக்குப் பகுதிகளில் தற்போது மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகளைக் குழப்பி பிரச்சினைகளை உருவாக்குவதும், அழிவுகளை ஏற்படுத்துவதுமே இவர்களின் இலக்கு என்று காவல்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன. திருகோணமலை குச்சவெளியில் ஈபிடிபி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்று விடுதலைப் புலிகள் மூவர் கைது செய்யப்பட்டதை அடுத்து இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சந்தேகபநபர்கள் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து தாம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாக இவர்கள் கூறியுள்ளனர். இலங்கை திரும்ப முன்னர் இவர்கள் தமிழ்நாட்டில் மூன்று இரகசிய முகாம்களில் ஆயுதப்பயிற்சிகளை பெற்றுள்ளனர். மீனவர்கள் போன்று வேடமிட்டுக் கொண்டு வடக்கு,கிழக்கில் இரகசிய நடவடிக்கைளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற பல கொலைகளின் பின்னணியில இவர்களே இருந்திருக்கலாம் என்று  புலனாய்வு சேவைகள் சந்தேகம் கொண்டுள்ளன. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இந்த மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட ஈபிடிபி உறுப்பினரின் சடலத்துக்கு அருகே, கிடந்த துண்டுக் காகிதம் ஒன்றில், “துரோகிகளுக்கு மரணம்: நாங்கள் மீண்டும் வந்துள்ளோம் – விடுதலைப் புலிகள்“ என்று எழுதப்பட்டிருந்ததாகவும் ஐலன்ட் நாளெடு செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை மற்றொரு கொழும்பு ஆங்கில நாளேடான ‘டெய்லி மிரர்‘, கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகளான மூன்று சந்தேகநபர்களும் இந்தக் கொலையுடன் தொடர்புடையவர்களா என்று உறுதிப்படுத்துதவதற்காக விசாரணைகள் நடைபெறுவதாக தகவல் வெளியிட்டுள்ளது. “சந்தேகநபர்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருக்கிறது என்பதை இன்னமும் உறுதிப்படுத்த முடியவில்லை. அவ்வாறு தொடர்புகள் இருப்பதற்கான சாத்தியங்களை நாம் நிராகரிக்கவில்லை. விசாரணைகள் தொடர்கின்றன“ என்று காவல்துறைப் பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்.

அத்துடன் குச்சவெளி பெரியகுளம் பகுதியில் கடந்த மார்ச் 18ம் நாள் கொலை செய்யப்பட்ட முத்து எனப்படும் ரகுநாதன் என்ற ஈபிடிபி உறுப்பினரின் சடலம் அருகே போடப்பட்டிருந்த “விடுதலைப் புலிகள்“ என்ற காகிதம், விசாரணையைத் திசை திருப்புவதற்காக போடப்பட்டிருக்கலாம் என்றே காவல்துறையினர் ஆரம்பத்தில் சந்தேகித்திருந்தனர் என்றும் ‘டெய்லி மிரர்‘ தகவல் வெளியிட்டுள்ளது.

ஈபிடிபியில் கடந்த 15-20 ஆண்டுகளாக முன்னணி உறுப்பினராக இருந்த முத்து, விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலினால் சிலகாலம் மறைந்த வாழ்ந்துள்ளார்.  இவர் இராணுவப் புலனாய்வாளர்களுக்கு தகவல் வழங்குனராகவும் செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.