முஸ்லிம் நாடுகளில் தொடருகின்றன போராட்டங்கள்
பக்ரைன் - நீண்ட நாள் லண்டனில் தங்கியிருந்த பக்ரைன் ஷியா பிரிவு எதிர்க்கட்சித் தலைவர் உசேன் முஷைமா, நேற்று முன்தினம் நாடு திரும்பினார். மக்கள் போராட்டம் பக்ரைனில் தொடர்கிறது.
எகிப்து முபாரக் நியமித்த அமைச்சரவை கலைக்கப்பட்டு புதிய அமைச்சரவை நியமிக்கக் கோரி, நேற்று முன்தினம் தாரிர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது. அன்று இரவு, போலீசார் அவர்களைத் தாக்கி கலைக்க முற்பட்டனர். இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது ராணுவ கவுன்சில். எனினும், போராட்டம் தொடரும் என்று மக்கள் எச்சரித்துள்ளனர்.
ஏமன் - நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், போலீசார் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். புதிய திருப்பமாக, ஹஷீத் மற்றும் பக்கில் என்ற இரண்டு பழங்குடியினங்கள், போராட்டக்காரர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன.
ஜோர்டான் - ஜோர்டானில் மன்னர் அப்துல்லாவின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில், 1952ல் நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசனத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அரசியல் சீர்திருத்தங்கள் செய்யக் கோரி, தலைநகர் அம்மான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஈராக் - ஈராக்கில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, ஊழல், அடிப்படை வசதியின்மை, வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தும்படி அரசியல்வாதிகளுக்கு ஷியா பிரிவு மதத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Post a Comment